Monday, May 13, 2013

திருதராஷ்டிர ஆசிரியர்கள்

நன்றி: பாவையர் மலர்


குடி உயரக் கோன் உயர்வானென்பது ஒளவையின் வாக்கு. ஆனால் கோமான்களின் உயர்வே முதன்மையாகக் கருதப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடிகளின் நலன் பிரதானப்படுத்தப்படாமல் ஆட்சியாளர்களின் எண்ணங்களே கோலோச்சும் நிலையில் மிகப்பாடுகள்படும் துயர்நிலையில் முதன்மையாய் இருக்கிறது கல்வித்துறை. அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் தனியார்களுக்குக் கைமாற்றப்பட்ட பின்னர், பணம் பண்ணும் தொழிற்பள்ளிகளென மாற்றம் பெற்றன. கடந்த சில ஆண்டுகளாக இதில் நடந்த தில்லுமுல்லுகள் ஏராளம். ஆசிரியர் பயிற்சிக்குத் தேவையான மதிப்பெண்ணைப் பெறாதவர்களும் பணம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; பயிற்சி பெறாமலும் வகுப்புக்கே வராமலும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்; பணம் கொடுத்தவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான சகலவிதமான வழிகளையும் அந்தந்த பயிற்சி நிறுவனங்களே பார்த்துக்கொண்டன.

அண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் இதன் விளைவுகள் வெட்டவெளிச்சமாகி சந்தி சிரித்தது. யாரும் கவனியாமல் இருந்த ஒரு சீர்கேட்டின் விளைவை அன்று நாம் நிதர்சனமாய் உணர்ந்து கொண்டோம்.

 6.72 இலட்சம் பேர் எழுதிய ஒரு தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைத் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர் பெருமக்களே தோல்வியுற்று தலை குனிந்து நிற்கின்றனர்.





 ------------------------------------------------------------------------------------------------------------     
முதல் தாள்                                                        இரண்டாம் தாள்

ஒரு இலக்க மதிப்பெண்      : 75                   ஒரு இலக்க மதிப்பெண்       : 116
4 முதல் 9 மதிப்பெண்            : 23                   4 முதல் 9 மதிப்பெண்          :    40
3 மதிப்பெண்                              : 52                   3 மதிப்பெண்                      :         76
------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் பயிற்சி பெற்று தகுதித்தேர்வை எழுதுகின்ற லட்சக்கணக்கானோர் தோல்வியுறுவதும் இத்தனை இழிவான மதிப்பெண் பெறுவதும் எதைக் காட்டுகிறது? இதற்கு நேரமின்மையை ஒரு காரணமாகச் சுட்டுகின்றனரென்றாலும் கூட அதை நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தகையோர் ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் எழுதி, தகுதி பெற்று எப்படி ஒரு வலிமையான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்? ஓட்டுநரை நம்பிச் சில மணி நேரங்கள் ஏதோ ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது கூட மிகக் கவனமாகப் பயணிக்கும், ஓட்டுநரைக் கண்காணிக்கும் நாம், நம் குழந்தைகளை நம்பி ஒப்படைக்கும் ஆசிரியரைப் பற்றி எப்போதாவது சிந்திக்கிறோமா? அவரைச் சந்திக்கவாவது முயற்சிக்கிறோமா? ஒரு குழந்தையின் மன அமைப்பை உருவாக்கும் வலிமை பெற்றவர்களில் பெற்றோர்க்கு அடுத்த நிலையில் ஆசிரியர் இருப்பதனால்தான் அவரை மாதா பிதா குரு தெய்வம் என்று வணங்குகிறோம். இறைவனுக்கு முன்னர் ஆசிரியரை வைத்துப் போற்றிய சமூகம்தான் இன்று இழிவான ஆசிரியர்களைச் சந்திக்கிறது; எல்லா ஆசிரியர்களையும் இழிவுபடுத்தவும் செய்கிறது. இரண்டுமே தவறல்லவா? 

கட்டுமானங்களிலும் வெளிப்பூச்சுகளிலும் கவனம் செலுத்தும் அரசும் சமூகமும் கல்விசார் உள்ளீடுகளில் அக்கறை செலுத்தவில்லையென்பதே இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். அது ஆரம்பக்கல்வியிலிருந்து ஆசிரியர் கல்வி வரையிலும் வேரோடிப் புரையோடிப் போயிருக்கிறது. இதற்கு முன்னரும் கூட சில கட்டுரைகளில் நான் சொல்லியிருக்கலாம். எத்தனை முறை நான் சொன்னாலும் வருத்தமும் சினமும் அடங்காத விஷயமிது. இன்றைய தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் பெரும்பான்மையில் தன் தாய்மொழியைப் பிழையின்றி எழுதுவதில் பெரும் சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது; பேசவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதில் சாதி, வர்க்க, பால் பேதமேயில்லை. முன்னர் மிகுந்த கவனத்துடன் பிழைகளைக் கவனித்துத் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இன்றைக்கு மாணவன் நலன் கருதி என்னும் அடைமொழியுடன் கருத்து இருந்தாலே மதிப்பெண் கொடுக்கலாமென்ற மாற்றத்தைப் பெற்றுவிட்டது. இதற்கு மொழித்தாள்களும் விதிவிலக்கல்ல. ஒற்றை வார்த்தை விடைகளைக் கொண்டே ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சி பெற்று விடும்படியாக நம் வினாத்தாட்களும் மாற்றப்பட்டன. இதுவும் மாணவன் நலன் கருதியே.

ஒரு வாக்கியத்தை உருவாக்கவே கற்றுக்கொள்ளாமல், தன் கருத்தைக் கோவையாய் வெளிப்படுத்தத் தெரியாமல் வினாவுக்கு உரிய விடையைப் புரிந்து கொண்டு எழுதத்தெரியாமல் சீர்கெட்டிருக்கும் மாணவனிடமிருந்தே அடுத்த தலைமுறை ஆசிரியன் உருவாகிறான். அங்கும் எந்த மாற்றமுமில்லை. தேர்வின் சந்துபொந்துகளில், இடைவெளிகளில் தப்பி வெளியேறி ஆசிரியராகும் ஒருவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

பல நாட்களாக நடந்து கொண்டிருந்த இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை, அரசு நடத்திய தகுதித் தேர்வுகள் வெளிச்சமிட்டு விட்டன.  தான்தோன்றித்தனமாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த, கண்காணிக்கத் தவறிய அரசு விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கிறது. ஆனால், இதன் பலன்களை வழக்கம்போல் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளே அனுபவிப்பதுடன், இத்தகைய திருதராஷ்டிர ஆசிரியர்களை நம்பித் தங்கள் கண்களையும் கட்டிக்கொண்டு காந்தாரிகளென அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையின் சீர்கேட்டிற்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் ஆசிரியர் அதில் மிக மிக முக்கியமானவர். தன் செயலுக்குப் பொறுப்பேற்றே தீர வேண்டியவர். 

சமூகத்தில் பல்வேறு தொழிலாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆசிரியரையும் மருத்துவரையுமே தெய்வமென்று கொண்டாடுகிறது சமூகம். அதிலும் ஆசிரியருக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி 'ஆசிரியர் தினம்' என்று பெயரிட்டு மரியாதை செய்கிறது. உயிர் காக்கும் மருத்துவருக்குக் கூடக்கிடைக்காத அரும்பேறு இது. தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நோய்நாடி நோய்முதல் நாடிய மருத்துவனைப்போய்த் திரும்பிப்போய் எவரும் பார்ப்பதில்லை. ஆனால் தான் படித்த பள்ளி, தனக்குக் கற்பித்த ஆசிரியர் என்று மனத்திலே பதித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சென்று சந்திக்கப்படுபவர் ஆசிரியர் மட்டுமே. எனவேதான் அந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோர் தவறும்போது அதிகபட்ச சினத்தோடு கொதித்துமெழுகிற்து. சிறு தவறுக்கும் பெரும் தண்டனையை கோருகிற்து. ஆசிரியர் சமுதாயம், தமக்கிருக்கும் மதிப்பையெண்ணிப் பெருமையடைவதோடு அதில் மறைந்திருக்கும் பொறுப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment